
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில், இவ்வாண்டுக்கான ஆடி பூரத் திருவிழா மிக விமர்சையாகத் தொடங்கியுள்ளது.
இத்திருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக்கிழமை வரை 11 நாட்கள் சிறப்பாக நடைப்பெறவுள்ள நிலையில் நாள்தோறும் இருவேளைகளிலும் சங்காபிஷேகம் இடம்பெறும்.
கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து, விழாவின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை, தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா குடும்பத்தினரின் உபயம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த புனிதமான வழிபாட்டில் சுமார் 700 பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அம்மனின் அருளளைப் பெற்றனர்.
இந்நிலையில் வரும் 15-ஆம் தேதி பூச்செரிதல் விழா நடைபெறவிருப்பதாகவும், அதிலும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், வரும் 16-ஆம் தேதி கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான தொடக்க பூஜைகள் நடைபெறவிருப்பது குறித்தும் நடராஜா பேசினார்.
இவ்வேளையில் நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றித் தெரிவித்த நடராஜா அடுத்த ஞாயிறு அனைவரும் பங்கேற்று அப்பூஜையை சிறப்பிக்குமாறும் பக்தர்களைக் கேட்டுக் கொண்டார்.



