
கோலாலம்பூர், மே-29- ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கை – திருநம்பிகள் உள்ளிட்டோருக்காக அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ‘Pride’ அல்லது ‘பெருமிதம்’ நிகழ்வை அதன் ஏற்பாட்டாளர்கள் இரத்துச் செய்ய வேண்டும்.
இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ நாயிம் மொக்தார் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
“Pride Care: Queer Stories & Sexual Health Awareness” என்ற தலைப்பில், அரசியல் கட்சியொன்றின் இளைஞர் பிரிவு ஜூன் 21-ஆம் தேதி அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
என்னதான் பொது வெளியில் அல்லாமல் உள்ளரங்கில் நடத்தப்பட்டாலும், இது போன்ற நிகழ்வுகள் சமூக விதிமுறைகளுக்கும் பெரும்பான்மையினரால் நிலைநிறுத்தப்படும் மத கோட்பாடுகளுக்கும் அப்பட்டமாக சவால் விடுகின்றன என்றார் அவர்.
எனவே போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதே சமயம், ஒருவேளை முஸ்லீம்களும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுக் கழகமான JAKIM-மும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாயிம் வலியுறுத்தினார்.
நமது நம்பிக்கை, நெறிமுறைகள் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு கூறுகளையும் அனுமதிக்க முடியது.
அவற்றிலிருந்து மலேசிய சமூகத்தின் தார்மீக கட்டமைப்பைப் பாதுகாக்க அனைவரும் உதவ வேண்டும்.
இயற்கைக்கு மாறான அம்சங்களும் கலாச்சாரங்களும் எந்தச் சூழ்நிலையிலும் மலேசியாவில் ஏற்றுக் கொள்ளப்படாது என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.