
புத்ராஜெயா, மே-29- அமைச்சரவையிலிருந்து விலகுவதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அனுப்பியக் கடிதங்கள் பெறப்பட்டிருப்பதை, பிரதமர் துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவற்றை நன்கு பரிசீலித்ததில், அவ்விரு அமைச்சர்களின் விடுமுறை கோரிக்கைகளை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்துள்ளார்.
‘மற்ற விவகாரங்கள்’ தொடர்பான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் சுருக்கமாகக் கூறினார்.
‘மற்ற விவகாரங்கள்’ என அவர் பூடகமாகக் குறிப்பிட்டது இருவரின் ராஜினாமாவைப் பற்றி தான்.
இதிலிருந்து ராஜினாமாவை அவர் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது விளங்குகிறது.
ஒருவேளை விடுமுறை முடிந்து திரும்பியதும் இருவரிடமும் பிரதமர் பேசி சமாதானம் செய்யவும் வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அண்மைய பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் ரஃபிசி துணைத் தலைவர் பதவியையும், நிக் நஸ்மி உதவித் தலைவர் பதவியையும் தற்காக்கத் தவறினர்.
இதையடுத்து பொருளாதார அமைச்சர் பதவியை ரஃபிசியும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் பதவியை நிக் நஸ்மியும் நேற்று ராஜினாமா செய்தனர்.
ரஃபிசியின் பதவி விலகல் ஜூன் 17-ஆம் தேதியும், நிக் நஸ்மியின் பதவி துறப்பு ஜூலை 4-ஆம் தேதியும் நடப்புக்கு வருமென இருவரும் தெரிவித்துள்ளனர்.