
கோலாலாம்பூர், மே-30 – செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானா இயோவுக்கு 400,000 ரிங்கிட்டை வழங்குமாறு UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் Dr கமாருல் சமான் யூசோஃப் உத்தரவிடப்பட்டுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் facebook-கில் அவதூறு பரப்பும் வகையில் 2 பதிவுகளை வைத்தற்காக, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
கமாருல் சமான் மீது ஹானா இயோ தொடுத்த அவதூறு வழக்கை அந்த இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதில் தனது தீர்ப்பில் கூறினார்.
என்றாலும், கமாருல் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென்ற ஹானாவின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
எந்த மன்னிப்பும் நேர்மையாக இருக்காது என்றார் அவர்.
தனது அரசியல் நடவடிக்கைகள் வாயிலாக ஹானா இயோ கிறிஸ்தவத்தைப் பரப்பியதாக 2017 மே 10-ஆம் தேதியும் பின்னர் 17-ஆம் தேதியும் facebook-லில் கமாருல் பதிவிட்டிருந்தார்.
“Becoming Hannah: A Personal Journey” என்ற சுயசரிதை புத்தகத்தின் வாயிலாக கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும், மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றவும் ஹனா இயோ எண்ணம் கொண்டுள்ளார் என கமாருல் கூறியிருந்தார்.
அவதூறு வழக்கின் தற்காப்பு வாதத்தின் போதும் கூட, தனது கூற்று அவதூறானது அல்ல என்றும், அதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்திடம் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.