
கோலாலம்பூர், மே-31 – முதலீடு, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சரான தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ், அம்னோவிலிருந்து விலகி, பி.கே.ரில் இணைகிறார்.
தனது Facebook பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவரே அதனை உறுதிப்படுத்தினார்.
அம்னோவில் வகிக்கும் அனைத்து பதவிகளையும் துறப்பதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகும் கடிதத்தை, நேற்று கட்சித் தலைமைக்கு அவர் அனுப்பி வைத்தார்.
அதோடு பி.கே.ஆர் கட்சியில் இணைய விரும்புவதாக அதன் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆர் உறுப்பினராவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி தாம் விண்ணப்பிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
தனது செனட்டர் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியில் முடிவடையும் முன்பே சாஃவ்ருல் அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைவார் என பிப்ரவரியிலேயே வதந்திகள் உலா வந்தன.
தற்போது அவரே அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வேளையில், தெங்கு சாஃவ்ருலை கட்சி உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டாமென பி.கே.ஆருக்கு அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள எந்தவொரு கட்சியும், கூட்டணி கட்சியின் உறுப்பினரைத் ‘திருடுவது’ அழகல்ல.
இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என அவர் சாடினார்.கூட்டணியையே இது ஆட்டம் காண செய்து விடும் என்றார் அவர்.