
கோலாலம்பூர், ஜூன் 3 – அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்த கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கலந்துக் கொண்டதை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் அவருக்கு நினைவூட்டியுள்ளது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 2018 ஆம் ஆண்டு மே மாதம் அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தினால் விவாதிக்கப்படாததால் அது செல்லாது என டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, 2018ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் இஸ்தானா நெகாராவில் கூடியதாகவும் அக்கூட்டத்திற்கு அப்போதைய பேரரசர் சுல்தான் முகமது V தலைமை தாங்கினார் என்று சட்டத்துறை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீரும் கலந்துகொண்டார் என சட்டத்துறை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில், மாட்சிமை தங்கிய பேரரசர் அன்வாருக்கு முழு அரச மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டதோடு , கூட்டத்தின் தேதியிலிருந்து உடனடியாக இது அமலுக்கு வந்தது. கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய எந்தவொரு அறிக்கைகளும் முற்றிலும் பொருத்தமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் மற்றும் அமைப்பின் நேர்மை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை கடுமையாக பார்க்கிறோம் என்று சட்டத்துறை தலைவரின் அலுவலகம் தெரிவித்தது. தற்போது பிரதமராக இருக்கும் அன்வார், 2018 பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு முழு அரச மன்னிப்பைப் பெற்றார்.