
கோலாலம்பூர், ஜூன் 12 – அண்மைய வாரங்களில் கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,புதிதாக கண்டறியப்பட்ட JN.1 கோவிட்-19 துணை திரிபு குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சின் அண்மைய தரவுகளின்படி, இவ்வாண்டு மே மாதம் முழுவதிலும் மொத்தம் 6,523 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன்படி தினசரி சராசரி சுமார் 228 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தற்போது கோவிட்-19 தொற்று அதிகரித்திருந்தாலும் , வாராந்திர சராசரி தேசிய எச்சரிக்கை அளவை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுவரை எந்த இறப்புகளும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாததாலும், தொற்றின் எண்ணிக்கை வாராந்திர சராசரியை விடக் குறைவாக இருப்பதாலும், இந்தத் தரவு நாட்டின் “கோவிட்-19 உடன் வாழ்வது” என்ற கட்டத்துடன் ஒத்துப்போகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதிக ஆபத்தை எதிர்நோக்கும் தரப்பினர் , அதாவது மூத்த குடிமக்கள், அடிப்படை சுகாதார பிரச்னைகள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முன்னணி மருத்துவ ஊழியர்கள், தொற்று அபாயத்தைக் குறைக்க கூடுதல் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற சுகாதார அமைச்சு ஊக்குவித்துள்ளது.