
புத்ராஜெயா, ஜூன்-14- சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக், கடந்தாண்டு ஆசியான் வட்டாரத்தில் மட்டும் 63.68 பில்லியன் முதல் 84.91 பில்லியன் ரிங்கிட் வரை இணைய விளம்பர வருவாயை ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையில், இவ்வட்டாரத்தில் உள்ள சுமார் 670 மில்லியன் தள பயனர்களுக்கு மோசடிகள் மற்றும் இணையச் சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் விளம்பரங்களும் அடங்கும் என்றார் அவர்.
மலேசியாவில் மட்டும், கடந்தாண்டு ஃபேஸ்புக் சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியுள்ளது.
“அவர்கள் (ஃபேஸ்புக்) காண்பிக்கும் பல விளம்பரங்கள் போலி முதலீடுகளை ஊக்குவிக்கும் மோசடி விளம்பரங்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் வாங்கக்கூடிய ‘மந்திர’ தயாரிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன; இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை; இது தான் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை” என ஃபாஹ்மி கவலைத் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட, ஃபேஸ்புக் குழுக்களுக்குள் போதைப்பொருள் மற்றும் வேப் விற்பனை நடவடிக்கைகளை அமைச்சின் அதிகாரிகள் அடையாளம் கண்டதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அமுல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் சமூக ஊடக தள உரிம முன்னெடுப்புடன் ஃபேஸ்புக் இன்னும் ஒத்துழைக்கவில்லை.
“அந்த உரிம முறையின் கீழ் அவர்கள் (ஃபேஸ்புக்) இன்னும் உரிமம் பெற மறுக்கிறார்கள். அவர்கள் பல விஷயங்களில் ஒத்துழைக்க விரும்பவில்லை” என்றும் ஃபாஹ்மி கூறினார்.
இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பயனர்களைப் பாதுகாத்தல் மற்றும் இணைய செய்தி சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனவரி 1-ஆம் தேதி, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அந்த உரிமத்தை அமுல்படுத்தியது