
கோலாலம்பூர், ஜூன் 19 – சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இரண்டு பேருந்து ஓட்டுநர்களின் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவ்விரு ஓட்டுனர்களுக்கும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சம்மன்கள் அனுப்பியுள்ளது.
ஜோகூர் மெர்சிங்கைச் சுற்றியுள்ள வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 2 பொதுப் போக்குவரத்து வாகனங்கள் JPJவிடம் சிக்கியதாக மலேசிய சாலைப் போக்குவரத்துத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி (Datuk Aedy Fadly Ramli) கூறியுள்ளார்.
அக்குற்றங்களைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருவதாகவும், அதன் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பில் புகார் அளித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி கொள்வதோடு, போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான குற்றங்களை நேரடியாகவோ அல்லது ‘MyJPJ’ விண்ணப்பத்தைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம் என்று ஃபாட்லி விளக்கமளித்துள்ளார்.