
கோலாலும்பூர், ஜூன் 24 – கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று பிரிக்ஃபீல்ட்ஸ் ஜாலான் துன் சம்பந்தனிலுள்ள உணவகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு பேர் காயமடைந்த நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக 19 சந்தேக நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களை எடுத்து வருவதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கு மஷாரிமான் கு மஹ்மூத் (Ku Mashariman Ku Mahmood) தெரிவித்துள்ளார்.
சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தேக நபரின் முக ஓவியத்தை காவல்துறையினர்கள் வெற்றிகரமாக பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு செராசிலுள்ள ஷாப்பிங் நிலையத்தில் இரண்டு நபர்களைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் முகமூடி அணிந்த குழுவை போலீசார் இன்னும் தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டை உலுக்கிய இந்த 2 கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர்கள் தீவிரமாக இருப்பதுடன், தகவல் அறிந்தவர்கள் உடனே காவல் நிலையத்தை அணுக வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.