
சிரம்பான், ஜூன்-29 – சிரம்பான் அருகே PLUS நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், உயர் சக்தி மோட்டார் சைக்கிளோட்டி, டிரேய்லர் லாரியில் அரைபட்டு உயிரிழந்தார்.
நேற்று மாலை 4 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், BMW மோட்டார் சைக்கிளோட்டியான 51 வயது ஆடவர், தலையில் படுகாயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டார்.
Ford Ranger இரக பிக்கப் லாரியை, 65 வயது நபர் ரெம்பாவிலிருந்து ஷா ஆலாம் நோக்கி அவசரப் பாதையில் ஓட்டிச் சென்றுள்ளார்.
சம்பவ இடத்தில் திடீரென அவர் பிரேக் வைத்த போது, பின்னால் வந்த BMW மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியது.
இதனால் சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி, அவ்வழியே வந்த டிரேய்லர் லாரியில் சிக்கி அரைப்பட்டதாக, சிரம்பான் போலீஸ் கூறியது.
அவ்விபத்துக்குப் பிறகு அவ்வழியே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளோட்டியும், அவசர பாதையிலிருந்த Ford Rangers லாரியை மோதினார்.
அந்த லாரி ஓட்டுநருக்கும் அவருடனிருந்த மாதுவுக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
இரண்டாவது மோட்டார் சைகிளோட்டிக்கு என்ன ஆனது என்பது இன்னமும் விசாரணையில் உள்ளது.