
கோத்தா பாரு, ஜூன் 30 – 14 நாட்கள் காலக் கெடுவிற்குள் கட்டப்படாமல் இருக்கும் சம்மன்களை செலுத்தத் தவறினால், விரைவுப் பேருந்துகள் மற்றும் வணிகப் பொருட்களை ஏந்திச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஜூலை 8 ஆம் தேதி காலக்கெடு முடிவடைந்த பிறகும் சம்மன்களைச் செலுத்தாத நபர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு சாலைகளிலில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுமென்றும் சாலை போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி கூறியுள்ளார்.
JPJ வின் தற்போதைய புள்ளி விவரத்தின்படி பேருந்து மற்றும் வாகன நிறுவன உரிமையாளர்கள் சம்மன்களை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் வழங்கப்பட்ட சம்மன்களின் எண்ணிக்கை தங்கள் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று கருதும் பொதுமக்கள் உடனடியாக அருகாமையிலுள்ள JPJ அலுவலகங்களை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.