
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-3,
தனியார் மகப்பேறு மையம் மற்றும் அதன் மருத்துவரின் அலட்சியத்தால், பிறக்கும் போதே மோசமான மூளைப் பாதிப்புக்கு ஆளான 16 வயது பையனுக்கு, RM4.1 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இழப்பீடாக RM600,000 மற்றும் அவனது எதிர்கால மறுவாழ்வுக்காக RM3.5 மில்லியன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதே சமயம், உணர்ச்சி துயரம் மற்றும் பட்ட கவலைகளுக்காக அப்பையனின் தாய்க்கு RM80,000 இழப்பீடு வழங்கப்படுகிறது.
ஜோகூர் பாருவில் உள்ள அந்தத் தனியார் மகப்பேறு மையத்தின் உரிமையாரும், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியில் எடுத்த மருத்துவரும், செலவுத் தொகையாக RM100,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டனர்.
அவ்விருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
2009-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவத்தில் ஏற்பட்ட கவனக்குறைவால், மகனின் மூளைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 2020-ஆம் ஆண்டு அத்தாய் வழக்குத் தொடுத்திருந்தார்.