
புது டெல்லி, அக்டோபர்-2 – ‘Arattai App’ – WhatsApp-ப்புக்கு போட்டியாக இந்தியா களமிறக்கியுள்ளப் புதியச் செயலி…
தமிழகத்தைச் சேர்ந்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தயாரித்துள்ள இச்செயலியே தற்போது இந்தியா குழுவதும் பேச்சுப் பொருளாகியுள்ளது.
அரட்டை என்ற சொல் தமிழில் சாதாரண உரையாடல் அல்லது chat எனப் பொருள்படும்; இதுவே இச்செயலி பயன்பாட்டின் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, பயனர்களின் தகவல்களை ஒருபோதும் மூன்றாம் தரப்புக்கு பகிராது என்பதே இச்செயலியின் சிறப்பம்சமாகும்.
வாட்சப்பைப் போலவே ஆவணங்கள் மற்றும் படங்களை பகிர்தல், குரல் மற்றும் உரைச் செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற அம்சங்களை ‘அரட்டை’ வழங்குகிறது.
குறிப்பாக 1,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய குழு உரையாடல்கள், தனிப்பட்ட குழுக்கள் என, உலகளாவிய சமூகவலைத் தள செயலிகளுக்கு மாற்றாக செயல்பட முயல்கிறது.
இதுபோன்ற சிறப்பம்சங்களால், இச்செயலி மூன்றே நாட்களில் 100 மடங்கு போக்குவரத்தை அதிகரித்துள்ளது; அதாவது ஒரு நாளைக்கு 3,000 -த்திலிருந்து 350,000 ஆக பதிவிறக்கங்கள் (downloads) வியக்கும் வகையில் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக App Store-ரில் வாட்சப்பைப் பின்னுக்குத் தள்ளி ‘அரட்டை’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பான ‘அரட்டை’ – பாதுகாப்பானது, எளிதில் பயன்படுத்தக்கூடியது, முற்றிலும் இலவசமானது என்பதால், இந்திய மக்கள் அதனை அதிகளவில் பயன்படுத்த வேண்டுமென அந்நாட்டு அரசாங்கமே ஊக்குவித்து வருகிறது.
வரவேற்பு அமோகமாக இருந்தாலும், உண்மையிலேயே வாட்சப்புக்குப் இந்த ‘அரட்டை’ செயலி போட்டிக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.