
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 23 – வலைத்தளத்தில் ‘influencer’ ஆக இருந்தாலே அனைத்தையும் இலவசமாக கேட்கலாம் என்ற மனபோக்கு வலைத்தள பிரபலங்களிடையே பெருகி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அத்தகைய ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஜார்ஜ் டவுனிலுள்ள நாசி கண்டார் உரிமையாளர் ஒருவர்.
அண்மையில் தனது உணவகத்திற்கு, 40,000 ‘followers’ஐ கொண்ட பிரபலம் ஒருவர் குடும்பத்தோடு வருகை புரிந்ததோடு மட்டுமல்லாமல் தன்னை அணுகி தான் ஒரு டிக்டோக் பிரபலம் என்று கூறி, சாப்பிடுவதற்கு தான் பணம் கட்ட வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த உரிமையாளர், அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்கள் உணவகம் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும், பிரபலமாக இருந்தாலும், சாப்பிட்டால் பணம் கட்ட வேண்டுமென்று தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றார்.
அந்த நபர் பின்னர் குடும்பத்துடன் உணவை உண்டுவிட்டு, பணத்தைக் கட்டும் சமயத்தில் மொத்தம் 53.60 ரிங்கிட் எனக் கூறிய போது மீண்டும் தன்னை பிரபலம் என்று கூறியுள்ளார். அவ்வாறு சொன்னாலும், ‘பணம் கட்ட வேண்டும்’ என்று அந்த உரிமையாளர் அமைதியாகவும் திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.
தனது தந்தையுடன் இணைந்து நான்கு ஆண்டுகளாக தான் நடத்தி வரும் இந்த உணவகத்தில் உணவுகளின் காணொளியைப் போட வேண்டுமென்றால் 2,000 ரிங்கிட்டைக் கேட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி, பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல சிறு தொழில் வியாபாரிகளும் தங்களுக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டதாக பகிர்ந்து வருகின்றனர்.