ஷா ஆலமில் பரவிய காட்டுத் தீ; 6 ஏக்கர் நிலம் தீயிக்கிரையானது

ஷா ஆலாம், அக்டோபர் 30 –
நேற்று மாலை ஷா ஆலம் புஞ்சாக் பெர்டானா (Puncak Perdana) தாமான் பெர்டானா ஹைட்ஸ் (Taman Perdana Height) அருகாமையிலுள்ள, ஜாலான் புலாவ் அங்சா (Jalan Pulau Angsa U10/2) பகுதியில் அமைந்துள்ள காட்டு பகுதியில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்காட்டின் சுமார் ஆறு ஏக்கர் நிலபரப்பு தீயிக்கு இறையானதென்று
சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் தீ சுமார் இரண்டு ஏக்கர் பகுதியில் மட்டுமே பரவியிருந்தது என்றும், சில நேரங்களிலேயே அது விரிவடைந்து சுமார் ஆறு ஏக்கர் பகுதியைச் சூழ்ந்தது எனவும் இயக்கத் தளபதி (Komander Operasi) முகமட் ஃபக்ருல்லா அப்துல் மானாப் (Mohammad Fakrullah Abdul Manaf) தெரிவித்தார்.
சில மணி நேரங்களிலேயே, சுமார் 80 சதவீத பகுதி தீயணைப்பு வீரர்களால் அணைக்கப்பட்டது என்றும், மேலும் 20 சதவீத பகுதியிலிருக்கும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றதென்றும் அறியப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



