
தஞ்சோங் மாலிம், நவம்பர்-7, மலேசியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வோர் ஆண்டும் பங்களிக்கும் நல்லார்க்கினியன் மரபு கவிதை போட்டியின் 7-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா, நாளை நவம்பர் 8, சனிக்கிழமை பேராக், தஞ்சோங் மாலிம் UPSI பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
KSAS வளாகத்தில் உள்ள Panggung Percubaan-னில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இவ்விழா நடைபெறும்.
மலேசியாவின் புகழ்பெற்ற தமிழ் கவிஞர் சீனி நைனா முகமதுவின் மரபுக் கவிதை பங்களிப்பை நினைவுகூரும் வகையில், UPSI தமிழ் மொழிக் கழகம் இப்போட்டியை ஏற்பாடு செய்து வருகிறது.
இவ்விழாவில் மாணவர்கள், இளையோர், பொது மக்கள் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அதே சமயம், மலேசியத் தமிழ் இலக்கியங்களுக்கு உயிரூட்டும் வகையில் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் 5 சிறந்த கவிஞர்களுக்கு சிறப்பு செய்யப்படும் என, விழா இயக்குநர் கீதர்சன் சுந்தரேசன் தெரிவித்தார்.
விழாவை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமைத் தாங்கி தொடக்கி வைக்கிறார்.
தமிழ் மரபுக் கவிதையின் வேர்களை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வான இதில் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு, ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களையும் ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.



