
கோலாலம்பூர், நவம்பர் 12 – சமூக ஊடகங்களில் பரவி வரும் SPM 2025 தேசிய மற்றும் ஆங்கில வாய்மொழி (Ujian Bertutur) தேர்வு கேள்விகள் கசிந்தன என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று கல்வி அமைச்சு (KPM) கூறியுள்ளது.
இணையத்தில் பகிரப்பட்டவை உண்மையான தேர்வு கேள்விகள் அல்ல என்றும் மாறாக Dokumen Standard Kurikulum dan Pentaksiran (DSKP)-இல் இடம்பெற்ற பொதுத் தலைப்புகளின் பட்டியல் மட்டுமே என்று அமைச்சின் ஆரம்ப விசாரணையில், தெரியவந்துள்ளது.
இத்தலைப்புகள் சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பரிந்துரையாகப் பகிரப்பட்டவையே தவிர அவை அதிகாரப்பூர்வமான கேள்வி கசிவுகள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அனைத்து தேர்வு தாள்களும் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன என்றும், அவை Akta Rahsia Rasmi 1972 சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றும் விளக்கப்படுத்தப்பட்டது.
SPM மாணவர்கள் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் பாதிக்கப்படாமல், நடைபெற்று வரும் தேர்வில் முழு கவனத்தையும் செலுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



