
புத்ராஜெயா, டிசம்பர் 27-1MDB ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மணிக்கணக்கில் தீர்ப்பை வாசித்தப் பிறகு புத்ராஜெயா உயர் நீதிமன்ற நீதிபதி Collin Lawrence Sequerah நேற்றிரவு அதனை அறிவித்தார்.
SRC International வழக்கில் தற்போது நஜீப் அனுபவித்து வரும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த கையோடு, 2028-ல் இப்புதியத் தண்டனை காலம் தொடங்கும்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக 270 மாதங்கள் அவர் சிறையிலிருக்க வேண்டுமென நீதிபதி அறிவித்தார்.
4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், 21 பணமோசடி குற்றச்சாட்டுகள் என அனைத்து 25 குற்றச்சாட்டுகளிலும் நஜீப் குற்றவாளியே என, உயர் நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்தது.
2.28 பில்லியன் ரிங்கிட் பணம், 1MDB நிதியிலிருந்து அவரது தனிப்பட்ட AmBank வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அப்பணம், அரேபிய அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என நஜீப் தரப்பு முன்வைத்த வாதம் பொய் என உறுதிச் செய்த நீதிபதி, 1MDB நிர்வாகமே சதி செய்து தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறியதையும் நிராகரித்தது.
இதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான 4 குற்றங்களுக்கும் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதே சமயம் 21 பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையும் அதிகார துஷ்பிரயோகத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை காலத்திலேயே அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பலமுறை ஒத்திவைக்கப்பட்டு 7 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு 1MDB வழக்கில் வந்துள்ள இத்தீர்ப்பை எதிர்த்து நஜீப் மேல்முறையீடு செய்யவுள்ளார்.



