
பந்திங், பிப் 3 – 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பந்திங் அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.41 மணிக்கு நடைபெறும் .
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 10 லட்சம் ரிங்கிட் செலவில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புதிய ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் உட்பட மேலும் பல பிரமுகர்கள் வருகை புரியவிருக்கிறார்கள்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் வெளியூர் உட்பட சுமார் ஐயாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இம்முறை ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி, துர்கையம்மன் ஆகிய இரு தெய்வ சன்னிதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு நிரந்தரமாக புதிய யாகசாலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தின் சிறப்பு அம்சமாக ஆலயத்தின் கோபுரங்கள் உட்பட ஆலயத்தின் மேற்பகுதி முழுவதும் விலையுயர்ந்த தங்க நிற சாயம் பூசப்பட்டுள்ளது. இதன் மூலம் கோலாலங்காட் வட்டாரத்தில் விலையுயர்ந்த தங்க நிற சாயம் பூசப்பட்டுள்ள ஒரே ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெறுகிறது.
தமிழகத்திலிருந்து வருகை புரியவிருக்கும் நான்கு வேத விற்பன்னர்களுடன் இணைந்து உள்ளூரைச் சேர்ந்த இருபது பேர்கள் கொண்ட அர்ச்சகர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பார்கள்.



