
சிலாங்கூர், பிப்ரவரி 3 – திரெங்கானு காற்பந்து அணியுடன் நடைபெற்ற சூப்பர் லீக் 2025/2026 போட்டிக்கு முன், Jambatan Angkat பகுதியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் காற்பந்து அணி தீவிர வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சில தனிநபர்களின் நடத்தை, சிலாங்கூர் ஆதரவாளர்களின் உண்மையான மதிப்புகளையும் ஆதரவு பண்பாட்டையும் பிரதிபலிப்பதில்லை என கிளப் தெரிவித்துள்ளது. மேலும், சட்டங்களை மீறும் அல்லது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் எந்தவிதமான செயல்களுக்கும் கிளப் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்த திரெங்கானு காவல் துறைக்கு சிலாங்கூர் காற்பந்து அணி
தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் ஆதரவாளர்கள் என நம்பப்படும் 33 பேரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெறுவதற்கு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.



