
கோலாலம்பூர், பிப்ரவரி 6 — பங்சார் சவுத் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவிய நேரத்தில், நடு சாலையில் ஒரு டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட டாஷ்கேம் காணொளியில், அந்த வாகன ஓட்டுநர் Hazard விளக்குகளை எரியவிட்டு, வாகனத்தை சாலையின் நடுப்பகுதியில் நிறுத்திய பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி சாலையை கடந்து சென்றது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, பின்னால் வந்த வாகனங்கள் திசைமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காணொளியில், ஓட்டுநர் அருகிலிருந்த சாலையோர வணிக ஸ்டாலை நோக்கி சென்றதாகத் தெரிகிறது. எனினும், அவர் எந்த காரணத்திற்காக வாகனத்தை நிறுத்தினார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் செயல் பொறுப்பற்றதுமானதும், சாலைப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமானதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “ஹசார்ட் விளக்குகளை பயன்படுத்துவது எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை நிறுத்த அனுமதியாகாது” என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மற்றும் சாலை போக்குவரத்துத் துறையான JPJ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.



