
இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுவெடிப்பு; 31 பேர் பலி, 169 பேர் காயம்
இஸ்லாமாபாத், பிப்ரவரி-7,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 169 பேர் காயமடைந்திருப்பதாக ஆகக் கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிவாசல் கதவை நெருங்கிய மர்ம நபர் திடீரென உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடிப்புக்கு முன் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக, உயிர் தப்பிய தொழுகையாளர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறுவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இரத்த தான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
_”அப்பாவி பொது மக்களைப் பலியாக்குவது மனிதநேயமற்றது”_ எனக் கூறி பாகிஸ்தானியப் பிரதமர் Shehbaz Shariff, அதிபர் Asif Ali Zardari உள்ளிட்டோர் இத்தாக்குதலை கண்டித்துள்ளனர்.
ஐநா அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் இந்தியாவுமே இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டிருப்பதாக, பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் Khawaja Asif குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் அவ்விரு நாடுகளுமே அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
கடந்த வாரம் தான் பலோசிஸ்தான் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.



