
கோத்தா பாரு, பிப்ரவரி 23 – கிளந்தான் பெங்காலான் செப்பா (Pengkalan Chepa) பகுதியில் உள்ள நீர் பானம் அதாவது ஜூஸ் விற்பனை கடை முன்பு, மீன்கன்னி போன்ற வேடமணிந்து நடனமாடிய நபரின் 26 விநாடி காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடை அணிந்திருந்த அந்த நபர், கையில் பானத்தைப் பிடித்தபடி நடனமாடியது மட்டுமல்லாமல், மீன்கன்னியைப் போன்று அசைவுகள் செய்ததையும் அக்காணொளியில் காண முடிந்தது. நோன்பு மாதக் காலத்தில் இத்தகைய செயல், ஒழுக்கமற்ற செயல் என வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜூஸ் விற்பனையை அதிகரிக்க சமூக வலைதளத்தில் இத்தகையை உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படுகின்றது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையின் வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை முன்னிட்டு மேல் விசாரணைக்காக கிளாந்தான் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை அந்த நபரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



