
குவாலா திரங்கானு, பிப்ரவரி-27-‘Kopi’ என்ற தெரு நாய் ஊராட்சி மன்றத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த வழக்கை, குவாலா திரங்கானு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Kopi, 2024-ஆம் ஆண்டு ஒரு பூனைக் குட்டியுடன் விளையாடிய வீடியோ வைரலானதால் பிரபலமானது.
ஆனால் அதே ஆண்டு அக்டோபரில், அது சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது இணையத்தில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
சினமடைந்த விலங்கு நல ஆர்வலர்களான Dr Kartini Farah Abdul Rahim, S முகுனன், Hong Hai San, சிலாங்கூரில் கைவிடப்பட்ட நாய் மற்றும் பூனைகள் நலன் காக்கும் சங்கத்தின் ஷஷி குமார் ஆகிய நால்வரும், பெசூட் மாவட்ட மன்றம், திரங்கானு அரசாங்கம் ஆகிய 2 தரப்புகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, இது 2015 விலங்கு நலச் சட்டத்தை மீறுவதாக வாதிட்டனர்.
ஆனால் நீதிமன்றமோ, அவர்கள் பெசூட் மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்லாததால், வழக்கு தொடரும் உரிமை இல்லை என்று தீர்மானித்தது.
அதோடு, வழக்கில் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே என்பதையும் அவர்கள் நிரூபிக்கவில்லை.
தவிர, பிராணிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவற்றை சுட்டுக் கொல்லும் நடவடிக்கைக்கு சட்டத்தில் இடமுண்டு என்பதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதித்துறை ஆணையர் Yusrin Faidz Yusoff தீர்ப்பளித்தார்.



