
ஜோகூர் பாரு, மார்ச்-6-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின ஆட்டக்காரர்களின் ஆவண மோசடியில் தாமும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டுபவர்கள், அவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என, JDT உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
“தக்க ஆதாரங்களுடன் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என, சமூக ஊடகத்தில் அவர் சவால் விடுத்தார்.
ஆவண மோசடிக்காக அந்த 7 வீரர்களுக்கு அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA விதித்த அபராதம், மற்றும் ஆட்டத் தடையை எதிர்த்து மலேசியக் கால்பந்து சங்கமான FAM அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றத்தில் (CAS) முறையீடு செய்த நிலையில், FIFA-வின் தண்டனை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட உள்ளூர் கால்பந்து இரசிகர் ஒருவர், இந்த ஆவண மோசடி சர்ச்சைக்கு TMJ-வே பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறியதற்கு பதில் வழங்கிய போது, ஜோகூர் இடைக்கால சுல்தானுமான துங்கு இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.
TMJ-யின் இப்பதிவு, குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளும் அவரது தயார்நிலையை வெளிப்படுத்துகிறது.
இதனிடையே CAS-சின் முடிவை அடுத்து, ஆசியக் கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவுக்கு FAM காத்திருக்கிறது.



