
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார்.
அதில், இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை மலேசியா கடுமையாக கண்டிப்பதாக அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு தலைவர்களுமே புனித ரமலான் மாதத்தின் போது நடைபெறும் இந்த மோதல் குறித்து கவலைத் தெரிவித்தனர்.
உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும், பிரச்னைக்கு தீர்வு காண தூதரக மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதோடு, ஐநா சபை மற்றும் BRICS போன்ற அனைத்துலக மேடைகளில் மலேசியா மற்றும் இந்தியா இணைந்து செயல்படவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த மலேசியா தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, நாளை கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அன்வாருக்கும் மலேசியர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் மோடி தெரிவித்துக் கொண்டார்.



