
புத்ராஜெயா, மார்ச்-26-பெட்ரோல் மற்றும் டீசலை தோம்பு அல்லது கொள்கலன்களில் வாங்க விரும்புவோர், கட்டாயமாக சிறப்பு பெர்மிட் அனுமதியைப் பெற வேண்டும்.
இந்த விதிமுறை 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுவதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN கூறியது.
பொதுவாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விற்பனை வாகனங்களின் டாங்கியை நிரப்புவதற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், சிறப்பு பெர்மிட் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டும் ட்ரம் அல்லது கொள்கலன்களில் எரிபொருள் வாங்க அனுமதி வழங்கப்படும்.
அத்தகைய அனுமதி பெற்றவர்கள் வாங்கும் அளவு, வாங்கும் இடம் மற்றும் எத்தனை தடவை வாங்க முடியும் என்பது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என KPDN நினைவுறுத்தியது.
பெர்மிட் இல்லாதவர்களுக்கு அவசர சூழ்நிலைகளில் மட்டுமே, 20 லிட்டருக்கு குறைவான அளவில் எரிபொருள் வாங்க அனுமதி வழங்கப்படும்.
இந்நடவடிக்கை, மானிய எரிபொருள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதையும் தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாக KPDN விளக்கியது.
இந்த சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க அமைச்சின் இணையத் தளத்தை பயன்படுத்தலாம்.



