
சென்னை, ஆகஸ்ட்-11-சுமார் 4 கிலோ கிராம் எடையிலான உயர் இரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்தி வந்த 35 வயது மலேசிய நாட்டவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, தாய்லாந்து பேங்காங்கில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய அந்த மலேசியப் பயணி, சுங்கத் துறை அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில், தம்மிடம் ‘அறிவிப்பதற்கு எதுவும் இல்லை’ (Nothing to declare) என்று கூறி ‘கிரீன் சேனல்’ வழியாக வெளியேற முயன்றார்.
எனினும், அவரது பயணப்பெட்டியை X-ray பரிசோதனை செய்தபோது, இரகசிய அறைகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.033 கிலோ கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
அவற்றின் மதிப்பு 4 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து இந்தப் பொட்டலத்தைப் பெற்றுச் சென்னையில் உள்ள நபர்களிடம் ஒப்படைக்க வந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனுடன் தொடர்புடைய உள்ளூர் கும்பலையும் அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



