
கோத்தா கெமுனிங், மார்ச்-28-கிள்ளான் சென்ட்ரல் ரோட்டரி கிளப் ஆறாவது முறையாக அதன் நல்லெண்ண கோல்ஃப் போட்டியை நேற்று நடத்தியது.
Swing For Charity 2026 என்றப் பெயரில் சிலாங்கூர், கோத்தா கெமுனிக் கோல்ஃப் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.


இம்முறை, 100 போட்டியாளர்கள் பங்கேற்றதாக, கிள்ளான் சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் தலைவர் மகேந்திரன் மாரிமுத்து கூறினார்.
வெறும் விளையாட்டைத் தாண்டி, இந்த நிகழ்ச்சியின் நோக்கமே B40 குடும்பங்களுக்கு உதவி செய்வது. குறிப்பாக கண் அறுவை சிகிச்சைக்கு நிதி சேகரிப்பதாகும் என அவர் சொன்னார்.
சவால்மிக்கதாக இருந்தாலும், இந்த வருடாந்திர நிகழ்வுக்கு சிலாங்கூர் இந்திய கோல்ஃப் விளையாட்டாளர்கள் சங்கத்தின் ஆதரவு மிக முக்கியமானது என்றார் அவர்.
இசை மற்றும் விருந்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, அணி உறுப்பினர்களுக்குப் பாராட்டு, குலுக்குச் சீட்டு, மற்றும் வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்குவதோடு இனிதே முடிவுற்றது.
இந்த நல்லெண்ண கோல்ஃப் போட்டி, ‘ஒன்றாக விளையோடுவோம், ஒன்றாக ஆதரவு கரம் நீட்டுவோம், ஒன்றாக மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்ற உறுதியான செய்தியைப் புலப்படுத்தியது.



