
கூலாய், ஏப்ரல்-4-2025 எஸ்.பி.எம். தேர்வில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளியிலிருந்து சென்றவர்கள் பெரும்பாலும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்துள்ளது நாம் அறிந்ததே.
தமிழ்ப் பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்றாக அமைந்து, ஒட்டுமொத்த சமூகமும் மகிழ்ச்சியில் உள்ளது.
அதே மகிழ்ச்சியில் உள்ளார், ஜோகூர், கங்கார் பூலாய் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை முனைவர் கோமதி சங்கரன்.



இவர் முன்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் படித்துகொடுத்த 35 மாணவர்களும், கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் முழுத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
அவர்களில் 26 பேர் 7 A-க்கள் மற்றும் அதற்கும் மேல் பெற்று மிகச் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்துள்ளனர்; 5 பேர் 6 A-க்களுக்கும் மேலும், 4 மாணவர்கள் 5 A-க்களுக்கு மேலும் பெற்றிருப்பது குறித்து, ஆசிரியை கோமதி பூரிப்படைந்துள்ள்ளார்.


மாணவர்களின் ஒழுக்கம், கடும் உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோர்களின் ஆதரவு ஆகியவை, இவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் என்றார் அவர்.
இவ்வேளையில், தமிழ்ப் பள்ளி மாணவர்களாலும் கல்வியில் சாதனைப் படைக்க முடியுமென்பதை நிரூபித்திருப்பதாக, மாணவர்கள் சிலரும் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஆசிரியர்கள் உட்பட, பிள்ளைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பெற்றோர்களும் நன்றி பாராட்டினர்


இவ்வேளையில், இந்த கங்கார் பூலாய் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இச்சாதனையை, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வெற்றிவேலன் மகாலிங்கம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“இந்த சாதனை, சமூகத்தில் கல்விக்கு தொடர்ந்து வழங்கப்படும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது குடும்பங்களின் உறுதியான ஊக்குவிப்பு, கற்றல் வளங்களுக்கான வசதி மற்றும் திட்டமிட்ட கல்வி முயற்சிகளின் ஆதரவால் சாத்தியமாகியுள்ளது” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகளின் ஆற்றல் குறித்து கேள்வி எழுப்புவோரின் வாயை அடைக்கும் வகையில், இதுபோல் சாதனைகளைப் படைத்து வரும் நம் மாணவர்களைப் பாராட்டுவோம்.



