
கோலாலம்பூர், ஏப்ரல்-9-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி முழுமையாக மீட்சியடைய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியக் கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக, உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக ஈரான் மீது தொடங்கியத் தாக்குதல்களால் வளைகுடாவின் எரிசக்தி மற்றும் எரிவாயு வளங்கள் வரலாறு காணாத சேதத்தைச் சந்தித்துள்ளன; அவ்வற்றை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் பிடிக்கலாம்.
எனவே, ஒருவேளை போர் இன்றே முடிவுக்கு வந்தாலும் கூட, எரிசக்தி உற்பத்தி, விநியோகம் மற்றும் விலைகள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பி விடாது என அவர் நினைவுறுத்தினார்.
இந்த நிலையில், மலேசியா உள்ளிட்ட நாடுகள் எரிசக்தி பயன்பாட்டை விவேகமாகப் பயன்படுத்தி, மாற்று எரிசக்தி வளங்களை மேம்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
சுருக்கமாகச் சொன்னால், உலகப் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைச் செலவையும் பாதிக்கும் இந்த நெருக்கடி, நீண்டகால திட்டமிடலுக்கானத் தேவையை வலியுறுத்துவதாக, புத்ராஜெயாவில் போக்குவரத்து அமைச்சின் பணியாளர்களுடனான இன்றையச் சந்திப்பில் அன்வார் தெரிவித்தார்.



