
புது டெல்லி, ஜூலை-10 – நீரிழிவு நோய் சிகிச்சையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் வாராந்திர இன்சுலின் ஊசியான ‘Awiqli’ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Novo Nordisk நிறுவனம் தயாரித்துள்ள இந்த இன்சுலின், தினமும் ஊசி போட்டுக்கொள்ளும் அவஸ்தையை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
அதாவது, இனி ஆண்டுக்கு 365 ஊசிகளுக்குப் பதிலாக, வெறும் 52 ஊசிகள் மட்டுமே போதுமானது.
இந்தியாவில் மட்டும் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊசி மீதான பயம் மற்றும் வலியால் பல நோயாளிகள் இன்சுலின் சிகிச்சையைத் தள்ளிப்போடும் சூழலில், இந்த வாராந்திர ஊசி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விலை வாரத்திற்கு சுமார் 261 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினசரி இன்சுலின் சிகிச்சையில் உள்ள சிக்கல்களைக் குறைத்து, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த புதிய தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



