
வாஷிங்டன், ஏப்ரல்-10,-“அவர்கள் இதைச் செய்யாமல் இருப்பதே நல்லது, இப்போதே நிறுத்திக்கொள்ள வேண்டும்!’
Hormuz நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துலகக் எண்ணெய் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ஈரானிய அரசுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கொடுத்துள்ள காட்டமான எச்சரிக்கையே இதுவாகும்.
உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணையில், கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் ‘பாதுகாப்பு வரி’ என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இது அனைத்துலகக் கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது என்றும், உலக வர்த்தகத்தை முடக்கும் முயற்சி என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
உலகின் மொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20% இந்த Hormuz நீரிணை வழியாகத்தான் கொண்டுச் செல்லப்படுகிறது.
எனவே, இங்கு ஏற்படும் சிறு இடையூறும் அல்லது புதிய கட்டணங்களும் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக உயர்த்தக்கூடும் என்ற கவலை மேலோங்கியுள்ளது.
தனது எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிச் செய்யவே இந்த நடவடிக்கை என ஈரான் கூறினாலும், கப்பல் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.



