
புத்ராஜெயா, ஏப்ரல்-20,
மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-பின் புதியத் தலைவராக டத்தோ ருஸ்லி ஜாஃபார் (Rusli Jaafar) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்நியமனத்தை மனித வள அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுச் சேவைத் துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட டத்தோ ருஸ்லி, இதற்கு முன் மலேசிய கூட்டுறவு ஆணையமான SKM-மின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர்.
இவரது தலைமையின் கீழ் கூட்டுறவுத் துறை டிஜிட்டல் மயமாகி, பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டின் மனித மூலதனத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் புதிய வியூகங்களை அவர் வகுப்பார் என HRD Corp நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொருளாதார மேலாண்மை மற்றும் நிறுவன மாற்றங்களை முன்னெடுப்பதில் வல்லவரான இவர், மனித வள மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
குறிப்பாக, அரசாங்கத்தின் MADANI Bekerja இலக்கை அடைவதில் இவரது தலைமை ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



