
புத்ராஜெயா, ஏப்ரல்-20,
தனது முன்னாள் கணவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன்வைத்த விண்ணப்பத்தைப் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லா எனப்படும் கே. பத்மநாதன் இருக்குமிடத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வாதத்திற்கு வலுசேர்க்க, சில சமூக ஊடகப் பதிவுகளை ஆதாரமாகச் சமர்ப்பிக்க இந்திரா காந்தி அனுமதி கோரியிருந்தார்.
அப்புதிய ஆதாரங்களானது, BUDI95, SARA 100 ஆகிய அரசாங்க உதவித் திட்டங்களை ரிடுவான் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுவது தொடர்பானவையாகும்.
ஆனால், அந்த ஆதாரங்கள் தற்போதைய மேல்முறையீட்டுக்குத் தொடர்பற்றவை என நீதிமன்றம் அறிவித்தது.
முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகள் பிரசன்னா டீக்ஷாவைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காகப் போலீஸ் மற்றும் அரசாங்கத்தின் மீது, இந்திரா100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
என்றாலும், புதிய ஆதாரங்களை ஏற்பது மேல்முறையீட்டு நடைமுறைகளின் சட்ட விதிகளில் இல்லை என நீதிபதிகள் குழு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
தனது மகளைப் பிரிந்து 16 ஆண்டுகளாகப் போராடி வரும் இந்திரா காந்திக்கு, இந்த நீதிமன்றத் தீர்ப்பு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.



