
சென்னை, ஏப்ரல்-23-2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து 234 தொகுதிகளிலும் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.50 மணி வரைக்குமான நிலவரப்படி சுமார் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
என்றும் இல்லாத அளவுக்கு தேர்தல் திருவிழா களைக் கட்டியிருப்பதால், இந்த அபரிமித வாக்குப்பதிவு சாத்தியமாகியுள்ளது.
ஆங்காங்கே சில மோதல்களைத் தவிர, பெரிதாக அசம்பாவிதம் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது; பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியோடு முதல்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கடும் போட்டியைக் கொடுக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான் மற்றும் விஜய் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவுச் செய்தனர்.
இளைய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் நடிகர் விஜய்யின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 6 மணி வரை அதாவது மலேசிய நேரப்படி இரவு 8.30 மணி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மக்களின் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது வரும் மே 4 தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.



