
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக, சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் எச்சரித்துள்ளார்.
இந்நிலை கிட்டத்தட்ட ‘Code Blue’ அவசர நிலைக்கு ஒப்பாகும் என்றார் அவர்.
Code Blue என்பது மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு திடீர் இதயத் துடிப்பு நிற்றல் அல்லது சுவாசத் தடை போன்ற உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்படும்போது, மருத்துவக் குழுவை விரைந்து செயல்பட அழைக்கும் ஒரு குறியீட்டு முறையாகும்
கடந்த ஜனவரியில் மருத்துவ அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட 5,000 இடங்களில், வெறும் 529 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.
இந்த 90 விழுக்காட்டு காலிப்பணியிடங்கள் நாட்டின் சுகாதார பாதுகாப்புக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய நடைமுறைகளால் இனி இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது என, அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, வெறும் செயற்குழுக்களை அமைப்பதை நிறுத்திவிட்டு, சுயேட்சையான ‘சுகாதார சேவை ஆணையத்தை’ உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் மட்டுமே தகுதியான மருத்துவர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கி, அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.
அரசியல் உறுதிப்பாட்டுடன் கூடிய சீர்திருத்தமே இப்போதைய தேவையென அவர் சொன்னார்.



