
கோலாலாம்பூர், மே-8-ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இந்தியப் பயணி ஜி. விஜயலட்சுமி நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போனதற்கு, அவரது மகன் இழப்பீடு கோரும் விவகாரத்தை நீதிமன்றத்திடமே அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ அவ்வாறு கூறியுள்ளார்.
2024-ல் நிகழ்ந்த அந்த எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு மலேசியா அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இறப்புச் சான்றிதழும் ஒருவழியாக குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இனி, நீதிமன்றத்தை நாடி அவர்கள் தான் இழப்பீட்டுத் தொகையைக் கோர வேண்டும்; நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அரசாங்கம் பின்பற்றும் என ஹானா இயோ சொன்னார்.
முன்னதாக, விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கத்திடம் 824,000 ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர்.
நேற்று கிள்ளானில் ஓர் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஜயலட்சுமியின் மகன் சூர்யா மற்றும் வழக்கறிஞர் எம். பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு அதனைத் தெரிவித்தனர்.



