
புக்கிட் மெர்தாஜாம், மே-11-கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘முத்ரா’ (MUDRA) எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை 70 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 2,000 இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அதனை அறிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு, நேற்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற விற்பனை விழா மற்றும் MAICCI எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழில் சங்க சம்மேள உறுப்பினர்கள் மற்றும் KUSKOP நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்குப் பிறகு அவர் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், அன்னையர் தின விழாவின் ஒரு பகுதியாக, TEKUN Nasional கீழ் செயல்படும் SPUMI திட்டத்தின் வழி 3 பெண் தொழில்முனைவோருக்கு அமைச்சர் நிதியுதவிக்கான காசோலைகளையும் அமைச்சர் எடுத்து வழங்கினார்.
இதில் ஜெலுத்தோங்கைச் சேர்ந்த கோமளதா என்பவர் தனது Megas Enterprise வணிகத்திற்காக 1 லட்சம் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றார்.
சிறு தொழில்முனைவோர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதே மடானி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.



