
கோலாலாம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் கடந்த மே 2-ஆம் தேதி நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தில், 24 வயது ஓட்டுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
டேனிஷ் ராமன் கமார் குமரேசன் (Danish Raman Kamar Kumaresan) என்ற அந்த இளைஞர், கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மே 2 அன்று அதிகாலை 5.30 மணியளவில், அவர் ஓட்டி வந்த கார், 61 வயது ஏ. துரைசிங்கம் மற்றும் 56 வயது மனைவி ஏ. மேனகா ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதில் தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மது போதையில் வாகனமோட்டியதாகக் கூறப்படும் இந்த விவகாரம், முதலில் சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட போதிலும், தற்போது குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் கொலையாக வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரதிவாதியின் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சவப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



