
பெட்டாலிங் ஜெயா, மே 18 – லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தின் Terminal 5 பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு மலேசிய பயணிகள் தங்களது பயணப்பெட்டிகளை பெற முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் (British Airways) விமானம் BA756 மூலம் லண்டன் வழியாக ஜெனீவா (Geneva) சென்ற மலேசிய பயணிகளுள் ஒருவரான சைடா அபு பாக்கார் (Saida Abu Bakar), தனது பயணப்பெட்டிகள் வராததால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உடைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். இதுவரை சுமார் 1,500 ரிங்கிட் செலவழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
World Health Assembly (WHA) மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர், விமானத்தில் ஏறிய பிறகே சாமான்கள் தொடர்பான பிரச்சினை குறித்து British Airways அறிவித்ததாக தெரிவித்தார். அதே விமானத்தில் பயணித்த மேலும் ஐந்து மலேசியர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹீத்ரோ விமான நிலையத்தில் சில பயணிகள் தங்களது சாமான்களை பெற பல மணி நேரம் காத்திருந்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



