
கோலாலம்பூர், மே-22 – கோலாலம்பூர், TBS ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தின் டிக்கெட் வழங்கும் கணினி இயந்திரங்களில் (kiosk) தமிழ்மொழிப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா கடும் கண்டனங்களைப் பதிவுச் செய்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார், மலாய், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பெங்காலி மொழிகள் இடம்பெற்றுள்ள வேளையில், நாட்டின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிக்கு அங்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகக் கூறினார்.
மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு பொது முனையத்தில், மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய தன்மை பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கை இனம் சார்ந்ததல்ல, மாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் சமூகத்தின் பாரம்பரியத்திற்கான அங்கீகாரம் மட்டுமே என்ற அவர், TBS நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அமைச்சும் உடனடியாக இதற்கு விளக்கமளித்து, தமிழ்மொழியை அந்த kiosk இயந்திரங்களில் சேர்க்க வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
உண்மையான ஒற்றுமை என்பது வெறும் முழக்கங்களாக இல்லாமல், இத்தகைய செயல்பாடுகள் மூலமே நிரூபிக்கப்பட வேண்டும் என, DSK குழுமத் தலைவருமான சிவகுமார் வலியுறுத்தினார்.



