
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க உதவியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக 2.14 மில்லியன் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்காகர் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் உரையாற்றிய அவர், உலகளாவிய விநியோக நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமைகளைச் சமாளிக்க இந்நடவடிக்கை அரசாங்கத்திற்குப் பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
மானிய நெருக்கடிகள் அதிகரித்த போதிலும், பொது மக்களுக்கான அரசாங்கச் சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்த WFH திட்டத்தில் ஈடுபட்டுள்ள 2 லட்சம் அரசு ஊழியர்களின் செயல்திறனை உறுதிச் செய்ய, அந்தந்தத் துறைத் தலைவர்கள் அனைவரும் விரைவான நடவடிக்கை, பரிவு, தெளிவான யோசனைகள் மற்றும் வியூக யுத்திகளை உள்ளடக்கிய ‘Tegas’ கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



