
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டாக்காவில் உள்ள Ad-Din தனியார் மருத்துவமனையின் பிரசவத்திற்குப் பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 1 முதல் 3 நாட்களே ஆன 6 குழந்தைகள், நேற்று அதிகாலை அடுத்தடுத்து உயிரிழந்தன.
விபத்து நிகழ்ந்த சமயத்தில், அந்த வார்டில் இருந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என அரசு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் டாக்காவில் 32 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவிய நிலையில், குளிரூட்டி இயங்காததால் வார்டுக்குள் போதிய காற்றோட்டம் இன்றி மூச்சுத்திணறல் ஏற்படும் சூழல் உருவானதாகக் கூறப்படுகிறது.
திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளும் உடனடியாக Ventilator உதவிக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தன.
குழந்தைகள் அனைத்தும் அடுத்தடுத்து நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
குளிர்சாதன அல்லது மின்சாரக் கருவிகளில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததா என்பதை அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் துறை (CID) தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.



