
கோலாலம்பூர், ஜூன்-2-NSM எனப்படும் மலேசியாவிற்கான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வே (Norway ) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு கோருவதற்கு மலேசியாவிற்கு உரிமை இருப்பதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் (Khaled Nordin ) தெரிவித்தார்.
இந்த ரத்து நடவடிக்கையால் மலேசியா நிதி இழப்புகளைச் சந்தித்ததுடன், மதிப்புமிக்க நேரத்தையும் வாய்ப்புகளையும் இழந்ததால், இந்தக் கோரிக்கை நியாயமானது என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக பெருமளவு பொதுப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி உரிமம் ரத்து செய்யப்படுவது குறித்து ( Norway) அந்த நிறுவனத்திற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தால், அந்த நிதியை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் காலிட் நோர்டின் குறிபிட்டார்.
NSM ஒப்பந்தத்தைக் கைவிட்டு, நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றுத் தீர்வுகளை மலேசியா தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், ஆனால் பொறுப்புக்கூறல் இல்லாத செயல்களை ஏற்றுக்கொள்ளவோ மறக்கவோ முடியாது என்றும் அவர் கூறினார்.
NSM அமைப்புக்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சி எளிதானது அல்ல, ஏனெனில் இவ்வளவு நுட்பமான ஒரு அமைப்பை குறுகிய காலத்தில் மாற்றீடு செய்ய முடியாது .
இந்த செயல்முறைக்கு, ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் பெறுவதும், மாற்று அமைப்பை தற்போதுள்ள தளத்துடன் ஒருங்கிணைப்பதும் தேவைப்படுகிறது என்றும், இதற்கு கணிசமான நேரம், செலவு மற்றும் வளங்கள் தேவைப்படும் என்றும் காலிட் நோர்டின் சுட்டிக்காட்டினார்.



