எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நாடுகளை நாடும் மலேசியா

ஜார்ஜ் டவுன், ஜூன் 10 – மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றநிலை காரணமாக, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து எரிபொருள் பெறும் வாய்ப்புகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நசீர் (Akmal Nasir) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயையும், சிங்கப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
எனினும், பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயின் தரம் மாறுபடுவதால், அவற்றை மலேசிய சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்படுத்த முடியுமா என்பதை பெட்ரோனாஸ் முதலில் தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், நாட்டின் எரிபொருள் கையிருப்பு ஜூலை மாத இறுதி வரை போதுமானதாக இருப்பதாகவும் அக்மால் நசீர் தெரிவித்தார். எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான மேல் தகவல்கள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.



