
தைப்பிங், ஜூன்-29-பேராக், தைப்பிங்கில் ஜூன் 16-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 41 வயது Nor Afiza Zainuddin, தான் கடத்தப்படவில்லை என சிலாங்கூர், காஜாங் போலீஸ் நிலையத்தில் நேரில் வந்து விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் காஜாங் போலீஸ் நிலையத்திற்கு வந்து தமக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியதாக, தைப்பிங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பரிடெண்டென்ட் Mohd Ariffridzuan Ezahar அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியது தனது சொந்த முடிவு என்றும், எவரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறிய Nor Afiza, தமக்குச் சற்று அமைதி தேவைப்படுவதால் குடும்பத்தினரோ அல்லது வேறு தரப்பினரோ தம்மைக் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எவ்வித காயமுமின்றி முழு ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக இருப்பதை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக ஜூன் 21 அன்று Nor Afiza ஓட்டிச் சென்ற Perodua Axia கார் பாடாங் ரெங்காஸ் பகுதியில் நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து பொது மக்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்



