
புத்ராஜெயா, ஜூலை-3-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தேசிய நிதி குற்றத் தடுப்பு மையம் எனப்படும் NFCC-யின் ஆலோசனை வாரிய உறுப்பினர் பதவியில் 2027-ஆம் ஆண்டு வரை தொடருவார்.
NFCC இன்று அதனை உறுதிப்படுத்தியது.
அசாம் பாக்கி, கடந்த 2024 செப்டம்பர் மாதமே அந்த ஆலோசனை வாரியத்தில் நியமிக்கப்பட்டதாகவும், அவரது பதவிக்காலம் 2027 வரை நீடிக்கும் என்றும் அம்மையம் விளக்கம் அளித்துள்ளது.
நிதி குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அசாம் பாக்கி கொண்டுள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த நியமனம் செய்யப்பட்டதாகவும், இது NFCC-யின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்த நியமனம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், அவற்றால் ஏற்பட்ட குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக NFCC தெரிவித்துள்ளது.
MACC தலைமை ஆணையராக இருந்த போது, தனியார் நிறுவன பங்குரிமை, வர்த்த மாஃபியா கும்பல் போன்ற சர்ச்சைகளில் சிக்கியவரான அசாம் பாக்கிக்கு எப்படி NFCC பதவி அளிக்கலாம் என, எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினும் முன்னதாக மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.



