
சிரம்பான், ஜூலை.06-
நெகிரி செம்பிலான், Taman Panchor Jaya பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ‘ Ops Samseng Jalanan’ சோதனையின் போது, மோட்டார் சைக்கிளால் போலீஸ் வீரரை மோதியதாக நம்பப்படும் இரண்டாம் படிவ மாணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது 15 வயது நண்பர் இரு காலை விடுவிக்கப்பட்டார். நேற்று அவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், சாலைத் தடுப்பை மீறி அவர்கள் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்விருவரும் போலீஸ் வீரர் ஒருவரை மோதியதில் அவருக்குத் தலை, வலது கால், கை, இடுப்பு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவ்வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, போதைப்பொருள் பரிசோதனையில் மாணவர்கள் இருவருக்கும் எதிர்மறை முடிவுகள் வந்தன. எனினும் 14 வயதுடைய மாணவர் விசாரணைக்காக இரு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நண்பர் விடுவிக்கப்பட்டதாகவும் மாநில காவல் துறை தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அம்மாணவர் தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்டதோடு அவரிடம் முறையாக லைசன்ஸ் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. பள்ளிக்குச் சென்று திரும்பி வர மட்டுமே மோட்டார் சைக்கிளை உபயோகிக்க அம்மாணவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்காக அம்மாணவரின் அண்ணனும் தாயாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.



